Sunday 20 January 2013

இறைவன

இறைவன் - கலீல் ஜிப்ரான்


*
A woman may veil her face with a smile.
பெண் , புன்னகை என்னும் முகமூடியால் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள் (ஆத்தீ இத நான் சொல்லல..)

**
Trees are poems that the earth writes upon the sky. We fell them down
and turn them into paper that we may record our emptiness.
பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள் , ஆனால் அவற்றை
நாம் வெட்டிச் சாய்த்து காகிதமாக்கி , நம் வெறுமையை அதில் எழுதித் தீர்க்கிறோம்

***
Only once have I been made mute. It was when a man asked me, \\\"Who are you?\\\"
ஒரே ஒரு முறை நான் ஊமையாக நின்றேன் \\\" நீ யார் ? என்று ஒருவன் என்னைக்
கேட்ட போது ..

****
என் ஆழ்மனத்திலிருந்து

என் ஆழ்மனத்திலிருந்து
ஒரு பறவை எழுந்து
வானோக்கிப் பறந்தது.

உயர உயரப் பறக்கப் பறக்க
அது மேலும் மேலும் வளர்ந்த்து
முதலில் அது
ஒரு குருவியாக.. பின்
ஒரு வானம்பாடியாக..பின்
ஒரு ககழுகாக..பின்
ஒரு பெரும் பனி மேகமாக...
மாறி மாறி பின்
விண்மீன்கள் மின்னும்
சொர்க்கத்தை நிரப்பியது.

என் மனத்திருந்து
ஒரு பறவை
வானோக்கிப் பறந்தது
அது பறக்க.. பறக்க..
வலிமையிலும் உருவத்திலும்
மேலும் வளர்ந்தது
இன்னும் என் மனதை விட்டு
விலகவில்லை.

என் நம்பிக்கையே!
என் பழக்கப்படுத்தா அறிவே!
உன் உயரத்திற்கு நான்
எவ்வாறு பறப்பேன்?

வானில் தீட்டப்பட்டுள்ள
மனிதனின் பெரும் சுயத்தை
உன்னுடன் எவ்வாறு பார்ப்பேன்?
என்னுள் இந்தக் கடலை
ஒரு பனியாக
எவ்வாறு மாற்றுவேன்.?

அளக்க முடியா வண்ணம்
ஆகாய வெளியில் உன்னுடன்
எவ்வாறு நகர்வேன்?

ஆலயத்தினுள்ளேயே
இருக்கும் ஒரு சிறைக்கைதி
அதன் தங்க முகடுகளை
எவ்வாறு உற்று நோக்க முடியும்?

ஒரு கனியின்
இதயத்தை நீட்டி
அந்தக் கனியினையே மூட
எவ்வாறு முடியும்?

என் நம்பிக்கையே!
வெள்ளிக்கம்பிகள்
வலுவான மரத்தடுப்புகள் பின்
சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டிருக்கும் நான்
உன்னுடன் பறக்க முடியாது.

ஆனாலும் என்
இதயத்திலிருந்து நீ
வானோக்கிப் பறக்கிறாய்.
என் இதயம் உன்னைப்
பிடித்து வைத்திருக்கிறது.
நான் மனநிறைவுடன் இருப்பேன்!!

*****
இறைவன்

முன்னொரு காலத்தில்
பேச்சின் முதல் தீண்டலை
என் உதடுகள் தரிசித்த போது
நான்
புனித மலையின் மேலேறி நின்று
இறைவனிடம் சொன்னேன்..
"எசமானனே.. நான் உன் அடிமை..
உன் மறைந்த நினைப்பே எனக்கு ஆணை..
உன்னை நான் எப்போதும் பணிந்திருப்பேன்..!!"
இறைவன் மறுமொழி ஏதும் கூறாமல்
ஒரு பெரும் புயலைப் போல்
என்னைக் கடந்து சென்றார்..

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர்
நான்
மீண்டும் புனித மலையில் ஏறி
மீண்டும் இறைவனிடம் சொன்னேன்..
"படைத்தவனே.. நான் உன் படைப்பு..
களிமண் கொண்டு நீ என்னை உருவாக்கினாய்..
நான் உனக்கே உரிமையானவன்..!!"
இறைவன் மறுமொழி கூறாமல்
ஆயிரம் சிறகுகள் போல்
கடந்து மறைந்தார்..

இன்னொரு ஆயிரம் ண்டுகள் கடந்ததும்
புனித மலையில் ஏறி
நான் மீண்டும்
இறைவனிடம் சொன்னேன்..
"தந்தையே.. நான் உங்கள் மகன்..
கருணையினாலும் அன்பினாலும்
நீங்கள் எனக்குப் பிறப்பளித்தீர்கள்..
பக்தியினாலும் வழிபாட்டினாலும்
நான் உங்களை அடைவேன்..!!"
இறைவன் மறுமொழி கூறாமல்
மலைச்சாரல் பனிமூட்டம் போல்
விலகி மறைந்தார்..

மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும்
மீண்டும் புனித மலையில் ஏறி
நான் இறைவனிடம் சொன்னேன்..
"இறைவா..
நீயே என் நோக்கம்..
நீயே என் நிறைவு..
நான் உன்னுடைய நேற்று..
நீ என்னுடைய நாளை..
நான் பூவுலகில் உன்னுடைய வேர்..
நீ வானுலகில் என்னுடைய மலர்..
சூரியனின் முகத்தின் முன்னால்
நாம் இருவரும் இணைந்து வளர்வோம்..!!"

இறைவன் என்னை நோக்கிக் குனிந்து
என் காதுகளில் இனிய சொற்களைக் கூறி
தன்னை நோக்கி வரும் நதியை
கடல் ஆரத் தழுவிக் கொள்வது போல்
என்னை அரவணைத்து எடுத்துக் கொண்டார்..

மலையிலிருந்து
நான் கீழே இறங்கி வந்த போது
இறைவன் எங்கும் நீக்கமற
நிறைந்திருந்தார்..

******
கண்

கண் ஒரு நாள் சொன்னது..
"பாலைவனத்திற்கு அப்பால்
ஒரு பனி மூடிய மலை
தெரிகிறது பாருங்கள்..
எவ்வளவு அழகாக இருக்கிறது..?"

காது கொஞ்ச நேரம்
உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப்
பிறகு சொன்னது..
"மலையா?? எந்த மலை??
எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!"

கையும் பேசியது..
"என்னால்
எவ்வளவு முயன்றும்
அந்த மலையைத் தொட முடியவில்லையே..
மலை நிச்சயம் இருக்கிறதா..??"

மூக்கு உறுதியாகச் சொன்னது..
"மலை எதுவும் கிடையாது..
எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை..!!"

கண் வேறு பக்கமாய்த்
திரும்பிக் கொண்டது..

மற்ற உறுப்புக்களெல்லாம்
தங்களுக்குள் பேசிக் கொண்டன..
இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தன..
"கண்ணில் ஏதோ
கோளாறு ஏற்பட்டு விட்டது..!!"

0 கருத்துரைகள்:

Post a Comment